உளவுத்துறையின் விளையாட்டு --

ஒரு காலத்தில் இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தின் உளவாளிகள் மிக அதிக அளவில் ஊடுருவ அனுப்பப்பட்ட நாடு எகிப்துதான். 1967-ம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய இந்த ஆபரேஷன், அப்போதைய மொசாத் தலைவர் அமீட் மெய்ரின் ஐடியா.
எகிப்துக்கு அனுப்பப்பட்ட உளவாளிகளை, அவர்கள் இஸ்ரேலில் இருந்து கிளம்பும் முன்னர் நேரில் அழைத்து, ஒவ்வொருவராக தனித்தனியாக சந்தித்தார் அமீட்.
“எகிப்தின் பாதுகாப்பு படைகளில் நாம் தற்போது கண்வைக்க வேண்டியது, விமானப்படையை மட்டும்தான். எந்தவொரு சிறிய விஷயத்தையும் தவற விடாதீர்கள். விமானப்படையினர் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு சிறிய விஷயமும் எங்களுக்குத் தேவை” என்றவர், சிறிய சம்பவங்கள் என்றால் என்ன என்பதற்கு சில உதாரணங்களை கூறினார்.
“எகிப்து விமானப்படை விமானி ஒருவர் தனது பரக்ஸிலிருந்து உணவு உண்ணும் மெஸ்ஸூக்கு நடந்து செல்ல எவ்வளவு நேரம் எடுக்கும்?”
“எகிப்து விமானப்படை அதிகாரி ஒருவர் தனது வீட்டிலிருந்து விமானப்படை முகாமுக்கு செல்லும்போது கய்ரோ நகரின் நெரிசலான ட்ராபிக்கில் சராசரியாக எத்தனை நிமிடங்கள் சிக்கிக் கொள்கிறார்?”
“முக்கியமான விமானப்படை அதிகாரிகளில் யார் யாருக்கெல்லாம், மனைவிக்கு தெரியாமல் பெண் சினேகிதிகள் இருக்கிறார்கள்?”
இப்படியான சிறிய சிறிய தகவல்களை எல்லாம் சேகரித்து அனுப்பும்படி ஏராளமான உளவாளிகளை எகிப்து நாட்டுக்குள் அனுப்பிய அமீட், அடுத்த கட்டமாக மொசாத்தில் ஒரு புதிய இலாகா ஒன்றை உருவாக்கினார். (உலக உளவுத்துறைகளின் சரித்திரத்திலேயே இந்த இலாகா ஒரு முன்னோடி. இன்று பல நாடுகளின் உளவுத்துறைகள் இப்படியான இலாகா ஒன்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் முன்னோடி மொசாத்தான். அதை உருவாக்கியவர் அமீட்.)
அந்த இலாகாவின் பெயர் LAP. ஹிப்ரூ மொழியில் விரிவாக்கம், Loh Amma Psichologit. தமிழில் சொன்னால், மனோதத்துவ போர் இலாகா.
இந்த புதிய இலாகாவில் பணிபுரிய சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் உளவாளிகள் அல்ல. மனோதத்துவ நிபுணர்கள்.
எகிப்திலிருந்து உளவாளிகள் சேகரித்து அனுப்பிய சிறு சிறு தகவல்களை எல்லாம் மொசாத்தின் LAP இலாகாவுக்கு வந்து சேர்ந்தன. அவை ஒவ்வொன்றாக, ஆராயப்பட்டன. ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எகிப்திய விமானப்படை அதிகாரிகளில், பாதிக்குப் பாதி பேர் ரகசியமாக ஏதாவது செய்துகொண்டு இருந்தார்கள்!
இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அதிகாரியின் ரகசிய நடவடிக்கைகளை ஆராய, தனித்தனி மனோதத்துவ நிபுணர் நியமிக்கப்பட்டார். அவரின் பணி, சம்மந்தப்பட்ட ஒற்றை அதிகாரியின் பைலை ஆராய்ந்து, அவரை எப்படி மனோதத்துவ ரிதியில் பாதிக்கலாம் என்று திட்டமிடுவது

LAP இலாகா ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாத காலத்திலே, திட்டத்தில் முதல் கட்டம் எகிப்தில் செயல்பட தொடங்கியது.
எகிப்து விமானப்படை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, யார் அனுப்பியது என்று தெரியாத வகையில் கடிதங்கள் வரத் தொடங்கின. அந்த கடிதங்கள் அனைத்துமே எகிப்திலேயே போஸ்ட் செய்யப்பட்டிருந்தன. கடிதங்களில் அந்த வீட்டுக்கார அதிகாரியின் வெளியுலகத் தொடர்புகள் பற்றி விலாவாரியாக எழுதப் பட்டிருந்தன.
சில கடிதங்களுடன் போட்டோக்களும் இணைக்கப்பட்டிருந்தன.
விமானப்படை அதிகாரிகளின் மனைவிகள், தங்கள் கணவன் வெறொரு பெண்ணுடன் ஷாப்பிங் செல்லும் போட்டோக்களையும், ரெஸ்ட்டாரென்ட்டில் உணவு உண்ணும் போட்டோக்களையும் பார்க்க நேர்ந்தது.
கடிதங்களைத் தவிர வேறு சில நடவடிக்கைகளும் நடக்கத் தொடங்கின. சில அதிகாரிகளுக்கு மர்மத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. அந்த அதிகாரிகளுக்கு, அவர்களது சக அதிகாரிகளின் பலவீனங்கள் பற்றி சொல்லப்பட்டன.
வேறு ஒரு அதிகாரியின் பிள்ளைகள் படிக்கும் பாடசாலைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று சென்றது. பாடசாலை அதிபரிடம் பேசிய பெண் குரலொன்று, குறிப்பிட்ட ஒரு பிள்ளை வகுப்பில் திறமையாகப் படிக்காமல் இருப்பதன் காரணம் அந்தப் பிள்ளையின் தந்தையின் தவறான நடத்தை என்று ஆதாரங்களுடன் கூறியது.
இவை அனைத்துமே கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு குறைவான நாட்களில் நூற்றுக்கணக்கில் நடந்தன.
மிக வேகமாகச் செய்யப்பட்ட மனோதத்துவ யுத்தம் அது. இலக்கு வைக்கப்பட்ட ஒவ்வொரு அதிகரியும், அவர் பிரச்னையை சமாளிக்கும் முன்னர், அடுத்த அட்டாக். அதற்கு அடுத்த அட்டாக் என்று திரும்பிய இடமெல்லாம் சிக்கல்மேல் சிக்கல்.
இந்த மனோதத்துவத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டு இரண்டு மூன்று தினங்களுக்குள் எகிப்து விமானப்படை முகாம்களில் அதிகாரிகள் சிக்-லீவில் அடிக்கடி போகத் தொடங்கினார்கள். சில நாட்களில் 50 வீதத்துக்கும் குறைவான அதிகாரிகளே பணிக்கு வந்தார்கள். அப்படி வருபவர்களில் சிலர் வேலை நேரத்திலேயே குடிக்கவும் தொடங்கினார்கள்.
இவர்களது உயரதிகாரிகளும் தட்டிக் கேட்பதில்லை. காரணம் உயரதிகாரிகளுக்கும் அதே பிரச்சனை.
இந்தச் சமயத்தில்தான், எகிப்தின் தலைவர் காமல் அப்தெல் நசீர், இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம் ஒன்றுக்குத் தயாராகி கொண்டிருந்தார். அந்த விஷயம் மொசாத்துக்கும் தெரிந்திருந்தது. அவர் யுத்தத்தில் இறங்கி இஸ்ரேலை தாக்குவதற்கு முன் இஸ்ரேல் முந்திக்கொண்டு எகிப்துக்கு பெரிய அடி ஒன்றை கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய அரசு விரும்பியது.
அதற்கான திட்டமிடல் பொறுப்பு, மொசாத் தலைவர் அமீட் மெய்ரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அமீட் அடுத்த கட்டத்துக்குத் தயாரானார். எகிப்துக்கு கொடுக்கப்பட வேண்டிய முதலாவது அடியை, எகிப்திய விமானப்படைக்கு கொடுப்பது என தீர்மானித்தார்!

எகிப்தின் அப்போதைய தலைவர் காமல் அப்தெல் நசீர், இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம் ஒன்றுக்குத் தயாராகி கொண்டிருந்தார். எகிப்திய ராணுவம் இஸ்ரேலை தாக்குவதற்கு முன் இஸ்ரேல் முந்திக்கொண்டு எகிப்துக்கு பெரிய அடி ஒன்றை கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேலிய அரசு விரும்பியது.
எகிப்து மீதான ஒரு பெரிய தாக்குதலுக்கான திட்டமிடல் பொறுப்பு, மொசாத் தலைவர் அமீட் மெய்ரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இஸ்ரேலிய அரசு தலைமை எகிப்துக்கு அடிகொடுக்க வேண்டும் என்று மாத்திரமே கூறியிருந்தது. எங்கே எப்படி அடி கொடுக்கவேண்டும் என்று கூறவில்லை. அதைத் தீாமானிக்கவேண்டிய பொறுப்பை அமீட்டிடமே விட்டிருந்தார்கள்.
அமீட் எங்கே அடிகொடுக்க வேண்டும் என்று யோசிக்க தேவையில்லாதபடி எகிப்தின் விமானப்படை தலைமை செயலகத்தையே மனோதத்துவ ரீதியில் கதிகலங்க வைத்துக் கொண்டிருந்தார் என்பதை கடந்த பாகத்தில் பார்த்தோம்.
எனவே எகிப்திய விமானப்படையில்தான் முதலாவது அடி கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். அதையடுத்து, அமீட்டின் வியூகம் கொஞ்சம் மாறியது.
விமானப்படை அதிகாரிகள்மீது மனோதத்துவ ரீதியிலான தாக்குதல்களை மேற்கொள்ளும் நடவடிக்கை ஒருபுறமாக நடந்துகொண்டிருக்க, மறுபுறத்தில் வேறு ஒரு செட் உளவாளிகளை எகிப்துக்கு அனுப்பினார் அமீட்.
முதலில் அனுப்பப்பட்ட செட் உளவாளிகளைப் போல, இவர்கள் தனிப்பட்ட விமானப்படை அதிகாரிகளின் நடவடிக்கைகளை பற்றி ஆராயத் தேவையில்லை. எகிப்தின் தலைமை விமானப்படை தளத்தின் முழுமையான செயல்பாடுகள் பற்றி உளவு திரட்ட வேண்டும்.
அவர்கள் எகிப்துக்கு சென்று திரட்டி அனுப்பிய தகவல்களையெல்லாம் சேர்த்து ஒரு முழுமையான உளவு அறிக்கை தயாரிக்க சுமார் ஒருமாத காலம் எடுத்தது. முழுமையான அறிக்கை கிடைத்தபோது அமீட்டின் விரல் நுனியில் எகிப்திய விமானப்படை தளத்தின் நடவடிக்கைகள் – அசைவுகள் எல்லாம் துல்லியமான விபரங்களுடன் இருந்தன.
இனி அவற்றை வைத்துக் கொண்டு திட்டம் போடவேண்டியதுதான் பாக்கி.
எகிப்தில் இருந்து உளவாளிகள் சேகரித்து அனுப்பிய சிறிய சிறிய தகவல்களை வைத்து அமீட் தயாரித்த அற்புதமான உளவு அறிக்கையில் உள்ள விபரங்களைப் பாருங்கள். அதன் துல்லியத்தன்மை தெரியும்.
1) காலை 7:30 இலிருந்து 7:45 வரையுள்ள 15 நிமிடங்கள்தான் எகிப்திய தலைமை விமானப்படை தளத்தின் மிகவும் பலவீனமான நேரம்.
அந்த நேரத்தில், இரவு முழுவதும் நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்தவர்கள் களைத்துப் போய் சோர்வாக இருக்கிறார்கள். காலை ஷிஃப்ட்டில் பணிபுரிய வருபவர்கள், வேலையில் இறங்க முற்றிலும் தயாராகாத நிலையில் இருக்கிறார்கள்.
2) விமானிகளுக்கான காலை உணவு 7:15 முதல் 7:45 வரை விமானப்படை மெஸ்ஸில் கொடுக்கப்படுகிறது. மெஸ்ஸில் போதுமான அளவு வேலையாட்கள் இல்லாத காரணத்தால், காலை உணவு பரிமாறல் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது. 7:45 மணிக்கு முன்னர் முழுமையாக உணவு பரிமாறி முடிவதில்லை.
3) விமானிகள் காலை உணவை முடித்துக்கொண்டு, மெஸ் இருந்த பில்டிங்கில் இருந்து தங்களது பாரக்ஸ்ஸூக்கு நடந்தே செல்கின்றார்கள். பாரக்ஸில்தான் அன்றைய பிளையிங் ஆபரேஷனின் பிளையிங் ராஸ்டர் உள்ளது. அதில் அன்றைய நாள் எந்தெந்த விமானி பறக்க வேண்டும், எந்தெந்த விமானி ஸ்டான்ட்-பையாக இருக்க வேண்டும் என்ற விபரங்கள் இருக்கும்.
இந்த இரு பில்டிங்குகளுக்கும் இடையே உள்ள தூரத்தை விமானிகள் நடந்து கடக்க, சுமார் 10 நிமிடங்கள் எடுக்கின்றன.
4) அன்றைய ராஸ்டரை பார்த்தபின், அதற்கு அருகேயுள்ள பூத்தில் அன்றைய தினம் பறக்க வேண்டிய விமானிகள் தமது பிளைட் பிளான்களை பெற்றுக் கொள்கிறார்கள். பூத்தில ஒரேயொரு நபரே டூட்டியில் உள்ளார். இதனால், எல்லா விமானிகளுக்கும் பிளைட் பிளான் கொடுத்து முடிய, 5 நிமிடங்கள் எடுக்கின்றன.
பிளைட் பிளான்களை பெற்றுக்கொண்டபின் அநேக விமானிகள் தங்களது பிளையிங் லைன்களுக்குப் போகும் முன் டாய்லட்டுக்குச் செல்கிறார்கள். சுமார் இரண்டில் இருந்து ஐந்து நிமிடங்கள் எடுக்கிறார்கள்.
5) எல்லா அலுவல்களையும் முடித்துக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிளையிங் லைன்களுக்கு வந்து சேரும்போது நேரம் காலை 8 மணியாகிவிடுகிறது.
6) கிட்டத்தட்ட அந்த நேரத்தில்தான் விமானத் தளத்திலுள்ள கிரவுன்ட் க்ரூ, அன்று பறக்க திட்டமிடப்பட்டுள்ள விமானங்களை அவற்றின் ஹாங்கர்களில் இருந்து வெளியே இழுத்து வருகிறார்கள். அதன் பின்னர்தான் அவற்றிற்கு எரிபொருள் நிரப்பல், ஆயுதங்கள் பொருத்தல் ஆகியவை நடைபெறுகின்றன.
7) அடுத்த 15 நிமிடங்களுக்கு பிளைட் லைன்கள் எரிபொருள் நிரப்பும் வாகனங்களாலும், ஆயுத வாகனங்களாலும் மிகவும் நெரிசலுக்கு உள்ளாகின்றன.
இந்த நேரத்தில் எந்தவொரு விமானத்திலும், அதன் விமானி அமர்ந்திருப்பதில்லை. விமானத்தின் ‘பாத்’ கிளியராக இல்லாதபடி பல வாகனங்கள் பாதையை அடைத்துக் கொண்டு நிற்கின்றன. அதன் அர்த்தம், உடனடியாக கிளம்புமாறு உத்தரவு கொடுக்கப்பட்டாலும், விமானங்களால் சடுதியாக கிளம்ப முடியாது.


பிரதான விமானப்படை தளத்தில் காலையில் என்ன நடக்கிறது என இந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டது போல, விமானப் படை தளத்தின் கன்ட்ரோல் டவரில் என்ன நடக்கிறது என்ற விபரங்களும் பெறப்பட்டு, உளவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதிலுள்ள விபரங்களைப் பாருங்கள்:
1) கன்ட்ரோல் டவரில் பணிபுரியும் அதிகாரிகள் பெரும்பாலும், கய்ரோ நகரின் புறநகர பகுதிகளிலேயே வசிக்கிறார்கள். கய்ரோ நகரின் புறநகர பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து கய்ரோவின் பிரசித்தி பெற்ற வாகன நெரிசலை கடந்து கன்ட்ரோல் டவர் பில்டிங்கை வந்தடைய 30 நிமிடங்கள் பிடிக்கின்றன.
2) கன்ட்ரோல் டவரில் பணிபுரியும் ஆபரேஷன் திட்டமிடல் அதிகாரிகள் (ஆபரேஷன் பிளானிங் ஆபிசர்கள்)  தங்களது மேஜைகளுக்கு காலை 8:15க்கு முன்னர் வந்து சேர்வதில்லை.
3) அதற்கு அடுத்த 10 நிமிடங்கள் காபி குடிக்கவும், சக அதிகாரிகளுடன் பேசவும் என்று கழிகிறது.
4) அநேகமாக எல்லா அதிகாரிகளும் காலை 8:30 மணிக்குத் தான் தங்களது சீட்களில் அமர்ந்து முதல் நாள் இரவு பதிவான ஓவர்நைட் சிக்னல்கள் பற்றி ஆராயத் தொடங்குகிறார்கள். சுருக்கமாக சொன்னால், 8 மணியில் இருந்து, 8.30 மணிக்குள், கன்ட்ரோல் டவரில் எந்த பணியும் நடப்பதில்லை. யாரும் அலர்ட்டாக இல்லை.
இவ்வளவு தகவல்களையும் உள்ளடக்கிய இரு உளவு அறிக்கைகளையும் வைத்து, இஸ்ரேலிய உளவுத்துறை தலைவர் அமீட், தாக்குதல் திட்டத்துக்கான ப்ரீலிமினரி ரிப்போர்ட்டை தயாரித்தார். அந்த ரிப்போர்ட், இஸ்ரேலிய விமானப் படையினரிடம் கொடுக்கப்பட்டது.
உளவுத்துறை ப்ரீலிமினரி ரிப்போர்ட்டின் முக்கிய அறிவுறுத்தல்: “தாக்குதல் நடத்துவதற்காக எகிப்துக்கு அனுப்பி வைக்கப்படும் விமானங்கள், எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என்பதை நீங்கள் (விமானப்படை) முடிவு செய்து கொள்ளலாம். ஆனால், சரியாக காலை 8 மணியிலிருந்து 8:30 வரையிலான நேரத்தில் விமானத் தளத்தின் இலக்குகள் மீது விமானங்கள் குண்டு வீச வேண்டும்.
எந்தவொரு காரணத்துக்காகவும் இந்த நேரத்தில் மாற்றம் செய்யக்கூடாது. அந்த 30 நிமிடங்கள்தான் விமானப்படை முகாமிலும், கன்ட்ரோல் டவரிலும் எல்லோரும் தத்தமது பொசிஷன்களில் இருக்க மாட்டார்கள்.
தாக்குதல் நடத்திவிட்டு விமானங்கள், சரியாக 8.30க்கு விமானத்தளத்துக்கு மேலுள்ள வான் பகுதியில் இருந்து அகன்றுவிட வேண்டும். அந்த இடத்தில் இருந்து மிக குறுகிய தூரமுடைய பிளைட் ரூட் வழியாக, இஸ்ரேலிய எல்லைக்குள் திரும்பிவிட வேண்டும்.
இடையில் என்ன தாமதம் ஏற்பட்டாலும், 8.30க்கு பிறகு எந்தவொரு விமானமும் குண்டு வீசிக்கொண்டு இருக்க கூடாது. எல்லாமே அதற்குள் முடிந்துவிட வேண்டும்.”
இந்த ப்ரீலிமினரி ரிப்போர்ட்டுடன், தாக்குதலை உளவுத்துறை மொஸாத்திடம் இருந்து, இஸ்ரேலிய விமானப்படை தமது கைகளில் எடுத்துக் கொண்டது. ராணுவ ரிதியிலான தங்களது திட்டங்களைப் போடத் தொடங்கினார்கள்.
எத்தனை மணிக்குக் கிளம்பவேண்டும்? எந்தப் பாதை ஊடாகப் பறக்க பிளைட் பிளான் போடப்பட வேண்டும்? எந்தப் பகுதி ஊடாக எகிப்திய எல்லையை அடைய வேண்டும்? எந்த இடத்தில் எல்லையை கடக்க வேண்டும்?
எல்லையை கடந்த விநாடியில் இருந்து விமானங்கள் இஸ்ரேலிய எல்லைக்கு வெளியே பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. அந்த விநாடியில் இருந்து, விமானத் தளத்தில் தாக்கப்படவேண்டிய இலக்குக்கு மேல் வந்து சேர எவ்வளவு நேரம் எடுக்கும்?
சுமார் எத்தனை நிமிடங்கள் இவர்களது விமானங்கள் எகிப்தின் ராடார்களுக்குள் தென்பட சந்தர்ப்பம் இருக்கிறது?
எகிப்திய ராடார்களில் இருந்து தெரியாமல் தப்ப எவ்வளவு உயரத்தில் பறக்க வேண்டும்? மொத்தம் எவ்வளவு நிமிடங்களுக்குள் தாக்குதல் முழுமையாக முடிந்துவிட வேண்டும்?
இந்தக் கேள்விகளின் அடிப்படையில் இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் திட்டத்தை போட்டது. அந்த திட்டம், உளவுத்துறை மொசாத் தலைவர் அமீட்டிக் கைகளுக்கு வந்து சேர்ந்தது. திட்டத்துக்கு அப்ரூவல் கொடுத்தார் அவர். திட்டம் செயல்படுத்த நாள் குறிக்கப்பட்டது.
1967-ம் ஆண்டு, ஜூன் மாதம் 5-ம் தேதி.  காலை சரியாக 8:01 க்கு இஸ்ரேலிய விமானப் படைத் தளமொன்றிலிருந்து விமானங்கள் கிளம்பின. எல்லையை கடந்து சினாய் நகரின் மேல் தாழப் பறந்து (இந்த சினாய் பகுதியில்தான் தற்போது யுத்தம் நடக்கிறது) இலக்கை நோக்கிச் சென்றன.
சரியாக 8:22க்கு முதலாவது குண்டு எகிப்பதின் விமானப்படை முகாமின்மேல் வீழ்ந்தது. அடுத்த நிமிடமே முகாமிலிருந்து கருஞ்சிவப்பு நிற புகை வானில் எழுந்தது – எரிபொருளும், விமானங்களின் அலுமினியப் பாகங்கள் உருகுவதிலுமிருந்து.
தொடர்ந்து கடகடவென அடுத்தடுத்த குண்டுகள் போடப்பட்டன. விமானத் தளத்தின், ஒவ்வொரு பகுதியிலும் குண்டுகள் விழுமாறு திட்டமிடப்பட்டு குண்டுவீச்சு நடந்ததில், விமானத்தளத்தில் அனைத்துப் பகுதிகளிலும் குண்டுகள் வெடித்து, தீ பற்றி எரியத் தொடங்கியது.
இதே நேரத்தில் இஸ்ரேலில், டெல்-அவிவ் நகரில் உள்ள மொசாத் தலைமை அலுவலகத்தில் தனது அறையினுள் இருந்த அமீட் ஜன்னல் வழியாக தெற்குத் திசை வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
டெல் அவிவ் நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து பார்த்தால், கய்ரோவில் உள்ள விமானத்தளம் தீப்பிடித்து எரிவது தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர், தமது அலுவலக ஜன்னல் வழியாக தெற்குத் திசை வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் – தரையில் அவர் செய்து முடித்து கொடுத்திருந்த உளவுப் பணியின் அறுவடை, இந்த நிமிடத்தில், வானிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்ற நினைப்புடன்!
அவரது நினைப்பு, 100 சதவீதம் பலித்தது! (முற்றும்)



நன்றி  --ரிஷி

Comments

Popular posts from this blog

[RG] Horror movies

107.John Wayne GACY Jr.

30. SERIAL KILLERS AND ASTROLOGY