இஸ்ரேல் உளவுத்துறையின் அதிரடிகள் -II

பாரிஸ் விமானத்தில் கடைசிப் பயணியாக ஏறிக்கொண்ட நபரின் பெயர் யாயா எல்-மஷாத். ஈராக்கி அணுசக்தி கமிஷனின் முக்கிய புள்ளி. அத்துடன் ஈராக்குக்காக வெளிநாடு செல்லும் தூதுக்குழுக்களில் அடிக்கடி அங்கம் வகிப்பவர். (இவர் ஈராக்கில் பிறந்தவர் அல்ல. எகிப்தியர். ஆனால், ஈராக்கிய அணுசக்தி கமிஷனின் தலைவராக இருந்தவர்)
பக்தாத்திலிருந்து பாரிஸூக்கு செல்லும் விமானத்தில் அவர் பயணிக்கிறார் என்ற விபரம் உடனடியாக இஸ்ரேலுக்கு தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து பாரிஸிலுள்ள மொசாத்தின் முகவருக்கும் தெரிவிக்கப்பட்டது.
பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கும் நிமிடத்தில் இருந்து அவரை பின்தொடர இரண்டு உளவாளிகள் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இந்த ஏற்பாடுகள் ஒருபுறமாக நடந்துகொண்டிருக்க, மறுபுறத்தில் இஸ்ரேலின் டெல்-அவிவ் நகரில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் ஐந்து பேரை அவசர அவசரமாக அனுப்பி வைத்தது மொசாத்.
அன்றைய தினம் டெல்-அவிவ் நகரில் இருந்து பாரிஸூக்கு நேரடி விமானம் இல்லாத காரணத்தால், இந்த ஐந்து பேரும் லண்டன் செல்லும் விமானத்தில் போய், அங்கே விமானம் மாறி பாரிஸூக்கு செல்வதாக ஏற்பாடு.
அனுப்பப்பட்ட ஐந்து பேரும் விமான நிலையத்துக்கு கிளம்பும் முன்னர், அவர்களை மொசாத்தின் தலைவர் கோஃபி தனிப்பட்ட முறையில் சந்தித்தார். அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இறுதி உத்தரவுதான், “யாயா எல்-மஷாத்தை சாட்சியங்கள், தடயங்கள் இல்லாத வகையில் அகற்றி விடுங்கள்.”
அதன் நேரடி அர்த்தம், ஆளை கொன்று விடுங்கள்.
இந்த ஐந்து பேரும் டெல்-அவிவ் நகரில் இருந்து எல்-அல் இஸ்ரேலி ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் சென்றனர். அங்கே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துக்கு மாறினர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், பாக்தாத் விமானம் வந்து இறங்கும் ஓர்லி விமான நிலையத்துக்கு செல்வதில்லை. பாரிஸின் பெரிய விமான நிலையமான சார்ள்ஸ் டி-காலுக்கு சென்றது.
பாரிஸின் ஓர்லி விமான நிலையத்தில் எல்-மஷாத்டும், சார்ஸ் டீ கால் விமான நிலையத்தில் அவரைக் கொல்ல மொசாத்தால் அனுப்பப்பட்ட ஐந்து பேரும் சில மணிநேர வித்தியாசத்தில் போய் இறங்கினார்கள்.
விமான நிலையத்தில் எல்-மஷாத்டை அழைத்துச் செல்ல தூதரக அதிகாரி ஒருவர் வந்திருந்தார் என்பதை அந்த விமான நிலையத்திலிருந்த மொசாத்தின் உளவாளிகள் கவனித்திருந்தார்கள்.
விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குச் சென்றவர்களை பின்தொடர்ந்து எல்-மஷாத் எந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டார்கள். அந்தத் தகவல் உடனடியாக இஸ்ரேலுக்கு அறிவிக்கப்பட்டது. மொசாத்தின் தலைமையகத்துடன் தொடர்பிலிருந்த மற்றுமோர் உளவாளிக்கும் அந்த விபரம் சொல்லப்பட, அவர் சால்ஸ் டீ கால் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஐந்து பேரிடமும் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
“இலக்கு Le Méridien ஹோட்டலில் இருக்கிறது”
இந்த ஐவரும் பாரிஸில் எங்கேயும் தங்கவில்லை. இஸ்ரேலியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளவும் இல்லை. நேரே ரெஸ்ட்டாரன்ட் ஒன்றுக்கு போய் உணவருந்தி விட்டு, எல்-மஷாத் தங்கியிருந்த ஹோட்டலை அடைந்தார்கள்.
அல்-மேஷாட்டுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு அவர் ஹோட்டலைவிட்டு வெளியே போகும்போதுதான் தேவை என்று முன்கூட்டியே கூறப்பட்டிருந்தது. எனவே பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டல் லாபியில் காத்திருந்தார்கள்.
Le Méridien ஹோட்டலுக்கு சென்ற ஐந்துபேரில் ஒருவர், லாபியில் நின்று கொண்டார். மிகுதி நான்கு பேரில் இருவர் எல்-மஷாத் தங்கியிருந்த ரூம் ஃபுளோரில் காவல் இருக்க, மற்றய இரண்டுபேரும் போலிச்சாவி போட்டுத் திறந்து ரூமுக்குள் நுழைந்தார்கள்.
தடயங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்ற காரணத்தால், கொல்வதற்கு துப்பாக்கி உபயோகிக்கவில்லை. கத்தி ஒன்றினால் எல்-மஷாத்டின் கழுத்தை அறுத்து கொன்றார்கள்.
காரியம் முடிந்தவுடன் அறையில் இருந்த பொருட்களை கலைத்துப் போட்டுவிட்டு, எல்-மஷாத்டின் பர்ஸையும் எடுத்துக் கொண்டு ஹோட்டலை விட்டு தப்பிவிட்டார்கள். யாரோ கொள்ளையடிப்பதற்காக உள்ளே வந்து, எல்-மஷாத்டை கொலை செய்துவிட்டார்கள் என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.
மேலே சென்ற நால்வரும் ஹோட்டலில் இருந்து வெளியேறி வேறு ஒரு ரெஸ்ட்டாரன்ட்டுக்கு சென்றுவிட, லாபியில் இருந்த நபர் மட்டும் தொடர்ந்து அங்கேயே இருந்து, என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
கொலை நடந்த விஷயம் வெளியே வர சிறிது நேரம் எடுக்கும் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, கொலை நடைபெற்று 15 நிமிடத்திலேயே ஹோட்டலில் வந்து இறங்கியது பிரென்ச் போலீஸ்.
இவர்கள் எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்து குதித்தார்கள் என திகைத்துப் போனார், ஹோட்டல் லாபியில் இருந்த மொசாத் உளவாளி!
அப்போதுதான், அந்தக் கொலையை ‘கண்ணால் கண்ட சாட்சி’ ஒருவர் உள்ளார் என்ற விஷயம் மொசாத்துக்கே தெரியவந்தது.

“பாரிஸ் Le Méridien ஹோட்டலில் எல்-மஷாத்தை தாம் கொலை செய்த விஷயம் வெளியே வர சிறிது நேரம் எடுக்கும் என்று மொசாத் நினைத்துக் கொண்டிருக்க, கொலை நடைபெற்று 15 நிமிடத்திலேயே பிரென்ச் போலீஸ் ஹோட்டலில் வந்து இறங்க, இவர்கள் எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்து குதித்தார்கள் என திகைத்துப் போனார், ஹோட்டல் லாபியில் இருந்த மொசாத் உளவாளி!” என்று எழுதியிருந்தோம்.
அப்போதுதான், அந்தக் கொலையை ‘கண்ணால் கண்ட சாட்சி’ ஒருவர் உள்ளார் என்ற விஷயம் மொசாத்துக்கே தெரியவந்தது.
மூடிய ஹோட்டல் ரூமுக்குள் இவர்கள் செய்த கொலைக்கு, ‘கண்ணால் கண்ட சாட்சி’ ஏற்பட்டது எப்படி?
எல்-மஷாத் தங்கியிருந்த ரும், suit வகையை சேர்ந்தது. அது ஒரு இரட்டை அறை. அதன் பிரதான அறைக்குள் சென்றுதான் அங்கிருந்த எல்-மஷாத்தின் கழுத்தை அறுத்து இவர்கள் கொலை செய்திருந்தார்கள். ஆனால், பிரதான அறையுடன் இணையாக இருந்த மற்றைய அறைக்குள் வேறு ஒருவர் இருந்தார். அந்த விபரம் இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
மற்ற அறைக்குள் இருந்தவர் ஒரு பிரெஞ்ச் விலைமாது. (ஈராக் ஆயுதம் வாங்கியது தொடர்பாக நாம் வெளியிட்ட கடந்த தொடரிலும், பிரெஞ்ச் விலைமாது ஒருவர் வந்தார் அல்லவா? அவர் மொசாத்தின் ஆள். இவர், மொசாத்துக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடிய ஆள்)
அடிக்கடி வெளிநாட்டு தூதுக்குழுக்களில் செல்லும் ஈராக்கிய வி.ஐ.பி.யான எல்-மஷாத், பாரிஸ் வரும்போதெல்லாம் இந்த விலைமாது அவருடன் தங்குவது வழக்கம். இம்முறையும் அப்படியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பக்கத்து அறையில் வித்தியாசமான சப்தங்கள் கேட்கவே, இந்த விலைமாது, இரண்டு அறைகளுக்கும் இடையிலுள்ள கதவின் சாவித் துவாரத்தினூடாக என்ன நடக்கின்றது என்று பார்த்திருக்கிறார்.
எல்-மஷாத் இரண்டு நபர்களால் கொல்லப்பட்டதை பார்த்து, உடனே போலீஸூக்கு தகவல் கொடுத்துவிட்டார்.
இப்போது மொசாத்துக்கு ஏற்பட்டுள்ளது பெரிய சிக்கல். கொலை செய்த இரண்டு பேரையும் கண்களால் பார்த்த சாட்சி ஒன்று ஏற்பட்டுவிட்டது.
ஹோட்டல் லாபியில் காத்திருந்த மொசாத்தின் உளவாளி, எல்-மஷாத்டின் உடல் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்படுவதையும், விசாரணை செய்யவந்த பொலீஸார் தங்களுடன் பெண் ஒருவரை அழைத்துச் செல்வதையும் பார்த்தார். மீதி விஷயத்தை ஊகித்து விட்டார்.
உடனே, பாரிஸிலிருந்த மொசாத்தின் பீல்ட் ஆபீஸரிடம் விஷயம் கூறப்பட்டது. அவர் டெல்-அவிவ் நகரிலுள்ள தலைமையகத்தை தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறி, என்ன செய்யலாம் என்று கேட்டிருக்கிறார்.
தலைமையகத்தில் சிறிது நேர ஆலோசனையின் பின்னர், என்ன செய்யவேண்டும் என்று கூறப்பட்டது.
பொலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டபின் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அந்த விலைமாது, தனது வீட்டை அடையும் முன்னர், வீதியில் வேகமாக வந்த கார் ஒன்று அவர்மீது மோதியது.
மோதிய கார் நிற்காமல் சென்றுவிட, அந்தப் பெண் அந்த இடத்திலேயே இறந்தார்.
பொலீஸ் விசாரணையின்போது இந்தப் பெண்ணை மோதிய காரும் அகப்படவில்ல. காரை யார் செலுத்தினார்கள் என்பதும் தெரியவரவில்லை.
இஸ்ரேலில் இருந்து அனுப்பப்பட்ட ஐந்து பேரும் பிரான்ஜில் இருந்து இஸ்ரேலுக்கு நேரே செல்லாமல், அன்றிரவே பாரிஸிலிருந்து கிரீஸ் நாட்டு தலைநகர் ஏதன்ஸூக்கு விமானம் ஏறி, அங்கே விமானம் மாறி டெல்-அவிவ் போய் இறங்கிவிட்டார்கள்.
ஈராக்குக்கு கடைசிவரை எல்-மஷாத்டை பாரிஸில் வைத்து கொன்றது யாரென்று தெரியவில்லை. பிரெஞ்ச் பொலீஸூம் இந்தக் கொலையில் மொசாத்தின் தொடர்பு இருந்தது பற்றி நீண்டகாலம் தெரிந்து கொள்ளாமலேயே இருந்தார்கள்.
அதே நேரத்தில், ஈராக்கில் பிரான்சின் உதவியுடன் தொடங்கப்பட்ட அணு ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை இயங்கு நிலைக்கு வருவதும் தாமதமாகியது. ஈராக் நினைத்ததுபோல உடனே அணுஆயுத தயாரிப்பு வேலைகளை தொடங்கமுடியாமல் இருந்தது. காரணம், பிரான்ஸில் இந்த ரியாக்டர் எந்திரத்தில் பொருத்த வேண்டிய இணைப்பு எந்திரம் தயாரிக்கப்படுவது தாமதமாகியது.
மொசாத்தினால் உருவாக்கப்பட்ட பொதுநல அமைப்பு La Seyne தொழிற்சாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்து எந்திரங்களை அடித்து நொறுக்கிய பின், உடனே மற்றொரு இடத்தில் எந்திர தயாரிப்பு வேலையை தொடங்காமல், சிறிது காலம் தாமதித்தது பிரான்ஸ்.
அந்த எந்திரத்தின் தயாரிப்பு வேலை 1981-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை தொடங்கப்படவில்லை.
ஆனால் இப்போது தாமதமானாலும், ஏதோ ஒரு காலத்தில் ஈராக் அணுஆயுதத்தை தயாரித்துவிடும் என்ற கவலை இஸ்ரேலுக்கு இருந்தது. இஸ்ரேலிய உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றில், ஈராக்கில் ரியாக்டர் எந்திரம் இருக்கும் பில்டிங்கை குண்டுவீசி அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.
இஸ்ரேலிய பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தாக்குதல் நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்கள். இந்த முடிவு, மொசாத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.
அப்போதும் அதை எதிர்த்தார் மொசாத்தின் அன்றைய தலைவர் யிட்சாக் கோஃபி. அதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மீண்டும் மீண்டும் கூறிப்பார்த்தார். ஆனால் பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த விவகாரத்தில் மொசாத்துக்கு உள்ளேயே பிளவு ஏற்படத் தொடங்கியது

மொசாத்தின் தலைவர் யிட்சாக் கோஃபி குண்டுவீச்சுத் தாக்குதலை முழுமூச்சாக எதிர்க்க, அவருக்கு அடுத்த நிலை பதவியில் இருந்த (மொசாத்தின்) துணைத்தலைவர் விமான தாக்குதல் செய்வதை ஆதரித்தார்.
அப்போது மொசாத்தின் துணைத்தலைவராக இருந்தவர் நகும் அட்மோனி.
“எமது தாக்குதல், சகல அரபு நாடுகளுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்” என்றார் நகும் அட்மோனி. இஸ்ரேலிய பிரதமரின் கருத்தும் அப்படியே இருக்கவே, பிரதமரின் அலுவலகம் மொசாத்தின் தலைவரை விட்டுவிட்டு, துணைத்தலைவரை நேரடியாக தொடர்பு கொண்டு, தாக்குதலுக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்கள்.
நகும் அட்மோனி செய்த முன்னேற்பாடு என்ன?
மொசாத்தின் தலைவர் யிட்சாக் கோஃபி எதிர்ப்புக்கான காரணங்களில் ஒன்று, ஒரு வேளை குண்டு வீசும் போது அந்த பில்டிங்கில் பிரான்ஸ் அனுப்பிவைத்த தொழில் நுட்ப நிபுணர்களும் இருந்தால் அவர்களும் கொல்லப்பட்டு விடுவார்கள். அதனால், இஸ்ரேலுக்கும் பிரான்ஸூக்கும் இடையிலுள்ள உறவு சீர்குலையும் என்பது என்று இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியிருந்தோம் அல்லவா?
அந்த விஷயத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் மொசாத்தின் துணைத்தலைவராக இருந்த நகும் அட்மோனி.
மொசாத்தின் உளவாளிகள் ஈராக்குக்குள் ஊடுருவினார்கள். அணுசக்தி ரியாக்டர் வைக்கப்பட்டிருக்கும் பில்டிங்கை சுற்றி வந்தார்கள். அந்த பில்டிங்குக்கு உள்ளே எத்தனை மணிக்கு பிரான்ஸ்காரர்கள் போகிறார்கள். எத்தனை மணிக்கு வெளியேறுகிறார்கள் என்ற தகவல்களை சேகரிக்க தொடங்கினார்கள்.
ஈராக்கிய தொழிற்சாலை பில்டிங் மீது குண்டுவீசுவது என்ற முடிவு, 1980-ம் ஆண்டு அக்டோபர் மாதமே எடுக்கப்பட்டது. ஆனால் தகவல் சேகரிக்கவும், முன்னேற்பாடுகளை செய்யவும் மொசாத் துணைத் தலைவர் அட்மோனி அதிக காலஅவகாசம் எடுத்துக் கொண்டார்.
தமது பாஸ் யிட்சாக் கோஃபியின் விருப்பத்துக்கு மாறாக செய்யும் ஆபரேஷன் என்பதால், மிக ஜாக்கிரதையாக இருக்க விரும்பிய அவர், நுணுக்கமாக தகவல் சேகரிக்க அதிக காலம் எடுத்துக் கொண்டார் என்கிறார்கள்.
இதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. ஈராக்கிய தொழிற்சாலை பில்டிங் மீது குண்டுவீசும் திட்டத்துக்கான தமது எதிர்ப்பை, மொசாத் தலைவர் கோஃபி எழுத்து மூலமாக ஆவணப்படுத்தி விட்டார். நாளைக்கே இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டால், மொசாத்தின தலைவர் என்ற முறையில் தமது தலையும் உருளும் என்பது அவருக்கு தெரியும்.
அதிலிருந்து தப்புவதற்கு கோஃபி சட்டரீதியாக தமக்கு பாதுகாப்பு தேடிக் கொண்டார்.

எனவே மொசாத்தின் துணைத்தலைவர் அட்மோனி மிகமிக ஜாக்கிரதையாக அலுவல்களை செய்யவேண்டியிருந்தது. குண்டுவீச்சின் போது யாராவது ஒரு பிரென்ச்காரர் இருந்தால்கூட, நிச்சயம் தாம் சிக்கலில் மாட்டுவோம் என்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
ஒரு வழியாக மொசாத் ஈராக்கில் இருந்து பெற வேண்டிய உளவுத் தகவல்களை எல்லாம் பெற்று, ஆராய்ந்துவிட்டு, “ஓகே.. இனி தாக்குதல் நடத்தலாம்” என்று கிரீன் சிக்னல் கொடுத்தபோது 1981-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆகிவிட்டது.
அதன்பின் பைல், இஸ்ரேலிய விமானப்படைக்கு சென்றது. 1981-ம் ஆண்டு, மார்ச் மாதம் 15-ம் தேதி தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டது.
அந்த நாள், ஜூன், 7-ம் தேதி. (ஆபரேஷன் ஒபாரா)
எட்டு எஃப்-16 தாக்குதல் விமானங்கள் இஸ்ரேலில் இருந்து கிளம்பின. அந்த எட்டு விமானங்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதற்கு ஆறு எஃப்-15 ரக விமானங்கள் கூடவே பறந்தன. எட்டு விமானங்களிலும், மார்க்-84 ரக தாமத வெடிப்பு குண்டுகள் (delay-action bombs) பொருத்தப்பட்டிருந்தன.
மாலை 3.55க்கு இஸ்ரேலின் எட்சியோன் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த 14 விமானங்களும், மிகவும் தாழ்வாக, பாலைவன மணல் பரப்புக்கு மேலாகப் பறந்து ஜோர்தான் நாட்டின் வான்பகுதிக்குள் வந்தபின் உயர்ந்தன.
ஜோர்தான் விமான தரைக்கட்டுப்பாட்டு டவருடன் ரேடியோ தொடர்பு ஏற்பட்டபோது, இஸ்ரேலிய விமானிகள், சவுதி உச்சரிப்புடன், அரபு மொழியில் பதில் கொடுத்தனர். தம் சவுதி விமானப்படை விமானங்கள் எனவும், பாதை மாறி ஜோர்தானுக்குள் வந்துவிட்டு, சவுதி வான் பகுதிக்குள் செல்லதாகவும் கூறினர்.
சவுதி வான் பகுதிக்கு மேலாக பறந்தபோது, ஜோர்தான் விமானப்படை பயன்படுத்தும் ரேடியோ அலைவரிசையில் சிக்னல்களை அனுப்பி, தாம் ஜோர்தானிய விமானப்படை என்றனர். இரு நாடுகளிலும், சந்தேகம் எழவில்லை.
அங்கிருந்து ஈராக்கின் எல்லைகளுள் நுழைந்தன இந்த விமானங்கள்.
இந்த விமானங்கள் ஈராக்கை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது, ஈராக்கில், என்ன நடந்து கொண்டிருந்தது?
ஈராக்கில், தாக்கப்பட வேண்டிய பில்டிங்கை கண்காணித்து கொண்டிருந்த மொசாத்தின் உளவாளிகள், அன்றைய தினம் பில்டிங்குக்குள் சென்ற அனைத்து பிரென்ச்காரர்களும் வெளியே வந்து விட்டார்களா என்பதை அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.
காலையில் பில்டிங்குக்குள் பணிக்கு சென்ற பிரென்ச்காரர்கள் ஒவ்வொருராக வெளியே வரத்தொடங்கினார்கள். கடைசி நபர் மாலை 5.15க்கு வெளியே வந்தார்.
“பில்டிங் கிளியர்” என்ற தகவல் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட, பறந்து கொண்டிருந்த விமானங்களின் விமானிகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
“எல்லாம் சரி. தாக்குதலை தொடங்கலாம்”
சரியாக 6:35க்கு, ஈராக்கின் அணு ஆயுத ரியாக்டர் இருந்த ஒசிராக் பில்டிங்குக்கு 20 கி.மீ. தொலைவில் பறந்து கொண்டு இருந்த F-16 விமானங்கள், சடுதியாக 2,100 மீட்டர்கள் உயர்ந்தன. அந்த உயரத்தை எட்டியதும், 35 டிகிரி கோணத்தில், 1,100 km/h வேகத்தில் கீழ்நோக்கி வந்தபோது, ரியாக்டர் பில்டிங்குக்கு நேர் மேலே இருந்தன.
F-16 விமானங்களில் இருந்த குண்டுகள், 5 விநாடி இடைவெளியில் இரண்டு, இரண்டாக ரிலீஸ் செய்யப்பட, அவை ரியாக்டர் பில்டிங் மேலே போய் விழுந்தன. மொத்தம் 16 குண்டுகள் போடப்பட்டன. அவற்றில் குறைந்தபட்சம் 8 குண்டுகள் பில்டிங் மீது விழுந்து வெடித்தன. பில்டிங் முழுமையாக சிதறியது. அதற்குள் இருந்த எந்திரங்கள் அனைத்தும் உருகி, முற்றிலும் அழிக்கப்பட்டன.
மொத்த தாக்குதலும், 2 நிமிடங்களில் முடிந்துவிட, 14 விமானங்களும் வட்டமடித்து, திரும்பின.
தாக்குதலை முடித்த விமானங்கள் இஸ்ரேல் திரும்புவதற்குமுன், பாக்தாத்திலுள்ள பாலஸ்தீன் மெரிடியன் (Palestine Meridien) ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரு குண்டுகளை போட்டுவிட்டு சென்றன. ஈராக்குடன் ஆயுத டீல்களை பேச வந்திருந்த ஆயுத வியாபாரிகள், அங்கிருந்து பாய்ந்து தப்பி ஓடியதில் அவர்களில் யாரும் இறக்கவில்லை.
இந்த விமானப்படை ஆபரேஷனுக்கு தலைமை தாங்கிச் சென்ற இஸ்ரேலிய விமானப்படை விமானி செவ் ரெஸ், “குண்டு வீசிவிட்டு இஸ்ரேல் திரும்பியபோது ஒவ்வொரு விமானியும் மற்றைய விமானிகளை ரேடியோவில் தொடர்புகொண்டு, ‘ஜொசுவா அதிகாரம் 10:12-ல்’ (கிட்டத்தட்ட பைபிளில் உள்ளது போன்ற Hebrew verse) உள்ள மத வாக்கியங்களை சொல்லிக்கொண்டு சென்றோம்” என பின்னாட்களில் இந்த தாக்குதல் குறித்து கூறியபோது, தெரிவித்தார்.
விமானத் தாக்குதல் நடைபெற்றபோது பில்டிங்கில் வெளிநாட்டவர்கள் யாருமே இல்லை. ஒன்பது ஈராக்கியர்கள் மாத்திரமே இருந்தார்கள். 9 பேரும் கொல்லப்பட்டார்கள்.
தாக்குதல் முடிந்து சில தினங்களில், மொசாத்தின் தலைவர் யிட்சாக் கோஃபி தனது பதவியை ராஜினாமா செய்தார். நகும் அட்மோனி உளவுத்துறை மொசாத்தின் புதிய தலைவரானார்.

முடிந்தது  ...

நன்றி ---ரிஷி

Comments

Popular posts from this blog

[RG] Horror movies

107.John Wayne GACY Jr.

30. SERIAL KILLERS AND ASTROLOGY