தொடர்ச்சி --நான்கு


Posted Image




'Crop Circles' என்று சொல்லப்படும் பயிர்வட்டங்களில், மனிதர்களால் செய்யப்பட்டவை போக மிகுதியாக எஞ்சி இருப்பவற்றை, மனிதனால் செய்யப்படாதவை என்று சொல்வதுதான் நிதர்சனமானது. இயற்கை தவிர்ந்து, உலகத்தில் உள்ள எதுவானாலும், மனிதனால் உருவாக்கப்படாமல், வேறு ஒரு மாற்று சக்தியினால் உருவாக்கப்பட்டன என்று சொன்னால், அது மிகச் சாதாரணமான ஒரு விசயமல்ல. அந்த மாற்றுச் சக்தி, அமானுஷ்யமானதாக இருப்பதால், நிச்சயம் அது வியப்பானதும், விந்தையானதும், நம்பவே முடியாததுமான ஒன்றாகத்தான் இருக்கும். பயிர்வட்டங்களிலும், நூற்றுக்கணக்கானவை அமானுஷ்ய சக்தியினால்தான் உருவாக்கப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக முடிவெடுத்துள்ளார்கள். அதிகம் ஏன், பத்தாயிரம் பயிர்வட்டங்களில் ஒரேயொரு பயிர்வட்டமாவது மனிதனால் செய்யப்படாமல், அமானுஷ்ய சக்தியால் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டாலே, அப்படியொரு சக்தி உலகத்தில் உண்டு என்பது உறுதியாகிவிடும். இதற்குக் காரணமாகச் சொல்லப்படும் அமானுஷ்ய சக்தியை வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதுவே நமது நாடுகளில் நடந்திருந்தால், இவற்றிற்கெல்லாம் காரணமாக கடவுள் என்னும் விதையை ஊன்றி, அந்த இடங்களில் கோவில்கள் கட்டப்பட்டு, திருவிழா வரைக்கும் சென்றிருக்கும். அதன் பின்னர் ஆராய்ச்சியென்ற ஒன்றே நடக்க முடியாதபடியுமாகியிருக்கும். இதனால்தானோ என்னவோ, புராதன காலங்களில் ஏலியன்கள் வந்ததாக மிகவும் பலமாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படும் இந்தியாவுக்கு, அப்புறம் ஏலியன்கள் வராமல் போய்விட்டார்களோ தெரியவில்லை.

Posted Image

ஏலியன்கள்தான் பயிர்வட்டங்களை உருவாக்குகின்றன என்று சொன்னால், ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்வதை ஒப்புக் கொள்வதாகிவிடும். உண்மையில் ஏலியன்கள் இருக்கின்றனவா என்னும் கேள்விக்கு ஆமாம் என்னும் பதிலைத் திடமாக யாராலும் சொல்லிவிட முடியாது. காரணம், அறிவியல் எப்போதும் கண்ணால் கண்டாலோ அல்லது இயற்பியல் விதிகளுக்குட்பட்டு அதை நிரூபிக்க முடிந்தாலோ மட்டும்தான், அப்படி ஒன்று இருக்கிறது என்று ஒத்துக்கொள்ளும். ஆனால் ஏலியன்கள் இருக்கின்றன என்பதை அறிவியல், நூறு வீதம் அல்ல ஆயிரம் வீதம் நம்புகிறது. என்ன குழப்புகிறேனா? நம்பிக்கை என்பது வேறு, இருக்கிறது என்னும் முடிவுக்கு வருவது வேறு. 'கடவுள் இருக்கிறார்' என்னும் கருத்தும் கூட, இந்த இரண்டு தளங்களில் இருந்துதான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று ஆன்மீகவாதிகள் நூறு வீதம் நம்புகிறார்கள். ஆனால் கடவுள் இருக்கிறார் என்று அவர்களால் இயற்பியல் விதிகளுக்குட்பட்டு நிரூபிக்க முடிவதில்லை. கடவுள் இருக்கிறார் என்ற ஆராய்ச்சியிலும் யாரும் ஈடுபடுவதில்லை. ஆனால், ஏலியன்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கென, உலக நாடுகள் அத்தனையும் கோடிக்கனக்கான பணத்தைக் கொட்டிச் செலவழித்துக் கொண்டிருக்கின்றன. விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள், அதியுயர் நவீன தொலைநோக்கிக் கருவிகள், விண்வெளியை ஆராயும் சாட்டிலைட் டெலஸ்கோப்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் என உலகம் பூராவும் பல ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், கோடிகளைக் கொட்டி, தங்கள் நேரங்களையும், படிப்புகளையும் அதற்கென்றே செலவழித்து ஏலியனைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். அதிகம் ஏன், கடந்த வாரம் செவ்வாயில் இறங்கிய 'க்யூரியாசிட்டி' (Curiosity) என்னும் ஆளில்லா விண்கலத்தின் மிக முக்கிய பணிகூட, செவ்வாயில் உயிரினம் இருப்பதற்கான அல்லது இருந்ததற்கான சாத்தியங்கள் உண்டா என ஆராய்வதுதான். இந்த இடத்தில் ஒன்று சொல்லியே ஆகவேண்டும். ஏலியன்கள் உண்டா? பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்திருக்கின்றனவா என்று நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, மனிதனால் உருவாக்கப்பட்ட பறக்கும் தட்டு ஒன்று பூமியின் அயல்கிரகத்தில் இறங்கியிருக்கிறது. இதற்கு நாஸாவைப் பாராட்டியே தீர வேண்டும்
ஏலியன்கள் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் ஏன் இவ்வளவு திடமாக நம்புகிறார்கள் தெரியுமா? சொல்கிறேன்! நமது பூமியின் அபூர்வமான அமைவினால், அதில் உயிரினங்கள் உருவாகிப் பெருகி வாழ்கின்றன. அபூர்வமான அமைப்பென்றால், அப்படி ஒரு அபூர்வம். ஆச்சரியகரமான பல நிலைகள் பூமிக்கு அமைந்ததால், அந்த அபூர்வமான, உயிர்கள் தோன்றக்கூடிய தன்மை பூமிக்கு எற்பட்டது. சூரியனில் இருந்து தூரவும் இல்லாமல் கிட்டவும் இல்லாமல் மிகச் சரியான தூரத்தில் இருப்பது, 23½ பாகை கோணத்தில் சாய்ந்திருப்பது, சரியான தூரத்தில் சந்திரன் இருப்பது, 'அட்மாஸ்பியர்' எனப்படும் வளிமண்டலம் இருப்பது, நீர், ஆக்சிஜன், காபனீரொக்ஸைட், நைதரசன் போன்றவை சரியான விகிதத்தில் கலந்து இருப்பது, கடல் இருப்பது போன்ற பல காரணிகள் ஒன்றாகப் பூமிக்கு அமைந்ததால், பூமியில் உயிரினம் தோன்ற ஏதுவாக இருந்தது. இவற்றில் ஒன்று கூட இல்லாவிட்டாலும், பூமியில் உயிரினமோ, மனித இனமோ வாழ முடியாது என்னும் அளவுக்கு இவை முக்கியமானவை. இப்படிப் பூமிக்கு அனைத்து காரணிகளும் ஒன்றாகச் சரியான அளவில் அமைந்தது போல, பிரபஞ்சத்தில் வேறு எங்காவது ஒரு 'கோள்' (Planet) இருக்கும் பட்சத்தில், அங்கும் உயிரினங்கள் வாழ சாத்தியங்கள் உண்டு. அப்படிப்பட்ட கோள்களைக் கடந்த ஐம்பது வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆச்சரியகரமாக சில கோள்கள் அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவை மனித சாத்தியங்களுக்கு எட்டாத அளவு மிகவும் தூரத்தில் இருப்பதால், அவைபற்றி மேலதிகமாக ஆராய முடியாமல், அங்கு உயிரினங்கள் உண்டா, இல்லையா என்ற முடிவுக்கு வரமுடியாமல் இருக்கின்றனர்.  
கணிதத்தில் 'நிகழ்தகவு' (Probability) என்னும் பகுதி ஒன்று உள்ளது. அதாவது, ஒரு நிகழ்வு எந்த அளவுக்கு நடைபெறக்கூடும் என்னும் சாத்தியக்கூறுகளை ஆராய்வதை 'நிகழ்தகவு' என்பார்கள். உதாரணமாக, ஒன்றிலிருந்து ஆறு புள்ளிகள் உள்ள தாயக்கட்டையை உருட்டும் போது, எத்தனை தரம் உருட்டினால் '5' விழலாம் என்பதை நிகழ்தகவு மூலம் சொல்லலாம். அதாவது, நிகழ்தகவின்படி, ஆறில் ஒரு பங்கு (⅙) சாத்தியம் உண்டு என்று கணிதம் சொல்கிறது. அது போல, அதே '5' மீண்டும் இரண்டாம் தடவை விழுவதற்கு, 36 இல் ஒரு பங்கு சாத்தியம் உண்டு. இது போல இன்னுமொரு உதாரணத்தையும் சொல்கிறேன். ஜெர்மனியில் ஒரு லாட்டரிச் சீட்டு இருக்கின்றது. 1 இலிருந்து 49 வரையிலான இலக்கங்களில், நீங்கள் விரும்பிய ஏதாவது ஆறு இலக்கங்களைத் தெரிவு செய்து, அந்த லாட்டரிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர், லாட்டரி சீட்டுக் குலுக்கும் தேதியில், ஆறு இலக்கங்களை, அவர்கள் தெரிவு செய்வார்கள். அந்த ஆறு இலக்கங்களும், நீங்கள் தெரிவு செய்த ஆறு இலக்கங்களும் சரியாக இருந்தால், முதல் பரிசு உங்களுக்குத்தான். கோடிக்கணக்கான ரூபாயை அள்ளிக் கொண்டுவரலாம். ஆனால் இந்த லாட்டரிச் சீட்டில், நீங்கள் தெரிவு செய்த ஆறு இலக்கங்கள் வருவதற்கு பதினான்கு மில்லியன்களில் ஒன்று என்னும் சாத்தியமே உண்டு. அப்படிப் பதினான்கு மில்லியனில் ஒருவராக நீங்கள் அமைந்துவிட்டால், பரிசு உங்களுக்கே! இது போல, பூமி போன்று, அதே அமைவுகளுடன் பிரபஞ்சத்தில் இன்னுமொரு கோள் இருப்பதற்கான நிகழ்தகவுச சாத்தியங்கள் நிச்சயம் இருக்கிறது. உதாரணத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம், பூமி போன்ற இன்னுமொரு கோள் பிரபஞ்சத்தில் இருப்பதற்கு, ஆயிரம் கோடியில் ஒரு கோளுக்குத்தான் சாத்தியம் உண்டு என நாம் வைத்துக் கொண்டால், பிரபஞ்சத்தில் அதைவிட அதிகமான கோள்கள் உள்ளன. சொல்லப் போனால், கோடான கோடி மடங்குகளுக்கு, ஆயிரம் கோடி கோள்கள் உள்ளன. பிரபஞ்சத்தில் அந்த அளவுக்கு நட்சத்திரங்களும், கோள்களும், உபகோள்களும் நிரம்பி வழிகின்றன. பூமியில் உள்ள கடற்கரைகளில் இருக்கும் மணல் துணிக்கைகள் எவ்வளவு உண்டோ, அதைவிட அதிகமான கோள்களும், உபகோள்களும், நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் உண்டு. அதனால், நிகழ்தகவின்படி பார்த்தாலும், பூமி போன்ற கோள்களும், அதில் உயிரினங்களும் இருப்பதற்குக் கோடிக்கணக்கான மடங்குகள் சாத்தியங்கள் உண்டு
நமது சூரியக் குடும்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், கோள்கள், துணைக்கோள்கள் என நூற்றுக்கும் அதிகமானவை உண்டு. அவற்றில் சந்திரனைப் பற்றியும், தற்போது செவ்வாயைப் பற்றியும் மட்டுமே நமக்கு முழுமையாகத் தெரியும். மற்றவையெல்லாம் ஒரு மேலோட்டமான கணிப்புகள்தான். இந்தக் கோள்களிலும், துணைக்கோள்களிலும் கூட உயிரினங்கள் உண்டா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. நமது சூரியனைப் போல, 200 பில்லியன்களுக்கும் அதிகமான நட்சத்திரங்கள், நமது சூரியன் இருக்கும் காலக்ஸியான பால்வெளி மண்டலத்தில் (Milkyway) உண்டு. பால்வெளி மண்டலத்தைப் போல, 500 பில்லியன் காலக்ஸிகள் பிரபஞ்சத்தில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறோம். 3க்கு அருகில் 23 பூச்சியங்களை இட்டால் என்ன இலக்கம் வருமோ, அதைவிட அதிகமான நட்சத்திரங்கள் நமது பிரபஞ்சத்தில் உண்டு. சூரியனுக்கு எப்படி நூறுக்கும் அதிகமான கோள்களும், துணைக் கோள்களும் இருக்கிறதோ, அதுபோலப் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்துக்கும் இருக்கும் அல்லவா? அப்படியெனில், அவை எந்த அளவுக்கு இருக்கலாம் என்று நீங்களே கணித்துப் பாருங்கள். இந்த எண்ணிக்கைகள் கூட நாம் இதுவரை கண்டுபிடித்தவைகளை மட்டும் வைத்துத்தான் சொல்கிறோம். ஆனால், கண்டுபிடிக்காதவை இன்னும் எவ்வளவோ உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரபஞ்சம் போன்றே பல பிரபஞ்சங்கள் உண்டு எனவும், நமது பிரபஞ்சத்துக்குச் சமாந்தரமாக இன்னுமொரு பிரபஞ்சம் (Parallel universe) உண்டு என்றுகூடச் சொல்கிறார்கள். இதையெல்லாம் சொன்னவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. சும்மா பொழுதுபோக்கிற்காகவும் அவர்கள் சொல்லிவிட்டுப் போகவில்லை. ஐண்ஸ்டைன் போன்ற மாமேதைகள் பல ஆராய்ச்சிகளின் முடிவில் சொன்னது இது.
இவ்வளவு எண்ணிக்கையில் பிரபஞ்சத்தில் சாத்தியங்கள் இருக்கும்போது, உயிரினங்கள் அங்கே எங்காவது வாழாது என்று சொல்ல விஞ்ஞானிகளால் முடியவில்லை. அதை அவர்கள் மிகவும் திடமாக நம்புகின்றனர். ஆனால் நம்பிக்கை மட்டும் போதாது. அதை நிரூபித்தால் மட்டுமே அறிவியல் அடித்துச் சொல்லும். அதுவரை அடக்கியே வாசித்துக் கொண்டிருக்கும். சமீபத்தில் கூட, மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட 'கடவுள் துகள்' என்று அழைக்கப்படும் 'ஹிக்ஸ் போஸான்' (Higgs boson) கூட இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்பினார்களே ஒழிய, இருக்கிறது என்று அடித்துச் சொல்ல முடியவில்லை. ஆனால் இறுதியில் அதைக் கண்டுபிடித்தே விட்டார்கள். இந்த நிலை ஏலியன்களுக்கும் நிச்சயம் வரும். ஏலியன்கள் உண்டு என்று நம்பும் நம்பிக்கையை ஒருநாள் நிரூபித்துக் காட்டுவார்கள். ஆனால் நம்முன்னே தற்போது இருக்கும் பிரச்சினை அதுவல்ல.
ஏலியன்கள் இருக்கின்றன என்பதல்ல இப்போது பிரச்சினை. பூமியில் ஏலியன்கள் உள்ளனவா? அல்லது பூமிக்கு ஏலியன்கள் வந்தனவா அல்லது இப்போதும் வந்துகொண்டிருக்கின்றனவா? அப்படி ஏலியன்கள் பூமிக்கு வந்தால், பலர் சொல்வது போல 'பறக்கும் தட்டு' (UFO) என்பதன் மூலமாகத்தான் வருகிறதா அல்லது வேறு வழிகளில் வருகிறதா? இவைதான் தற்போது நம்முன்னே இருக்கும் பிரச்சினை. இதற்கான பதில்தான், பயிர்வட்டங்களின் மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்க முடியும். ஆகையால், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மிகச் சாதாரணமாக, 'ஆம்', 'இல்லை' என்பது போலப் பதில்களைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியாது. இவற்றையெல்லாம் நாம் விபரமாகவே பார்க்க வேண்டும்
பயிர்வட்டங்கள் உருவாவதன் மூலகாரணம் என்ன என்பதை அறியும் கட்டத்தில், ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனவா என்னும் பெரும் கேள்வி நம்மைப் பல இடங்களிலிருந்து தாக்குகின்றது. ஏலியன்கள் பூமிக்கு வந்தனவா என்பதில், 'நம்புவதா? நம்பாமலிருப்பதா?' என்று நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துவது போலப் பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. 'வாயால் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதோ இந்தக் காணொளிகளைப் பாருங்கள்' என்று கூறியபடி, ஆயிரக்கணக்கான காணொளிகள் உலகைச் சுற்றி வலம் வருகின்றன. ஆரம்பத்தில் இந்தக் காணொளிகள் எல்லாம் புகைப்படத் தொழில் நுட்பங்களினால், போலியாக உருவாக்கப்பட்டுள்ளன என்று சொல்லி வந்த அரசுகள், அவற்றின் வீரியம் தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கி வாசிக்கத் தொடங்கின. காணொளிகள் போலியானவை என்று அரசுகள் சொல்லியதில் அர்த்தமும் இல்லாமலில்லை. புகைப்படத் தொழில்நுட்பத்தினாலும், கணினித் தொழில்நுட்பத்தினாலும் பலர் இப்படியான காணொளிகளையும், புகைப்படங்களையும் பெரும்படியாக உருவாக்கியது நடந்துதான் இருக்கின்றன. இவர்கள் பொழுதுபோக்கிற்காகச் செய்யும் இந்தச் செயல்கள், பல உண்மைகள் மறைக்கப்படவும், அலட்சியப்படுத்தப் படவும் காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த விசயத்தில் பொதிந்திருக்கும் உண்மை எதுவெனப் புரிந்துகொள்ள முடியாமல், ஒரு குழப்ப நிலையிலேயே மக்களை வைத்திருக்க இவை ஏதுவாகின.
ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனவா? என்பதை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, சில அறிஞர்கள் சொல்லும் இன்னுமொரு கோட்பாடு அதைவிட அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? "ஏலியன்கள் பூமிக்கு வந்து போனது மட்டுமல்ல, அவை பூமியில் தற்போது வாழ்ந்தும் கொண்டிருக்கின்றன" என்கிறார்கள். இதை வாசிக்கும்போது, உங்களையறியாமலே ஒரு புன்னகை உங்கள் மனதில் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. 'ஏலியன்கள் பற்றி ஏதோ சொல்வதை நாம் கேட்கிறோம் என்பதற்காக, நம் காதில் பூவுக்குப் பதிலாகப் பூச்சாடியையே இவர் வைக்கப் பார்க்கிறாரே' என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான், இதை யாருமே நம்ப முடியாதுதான். நானே நம்புகிறேனா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் இதைச் சொல்பவர்கள் ஏதோ நகைச்சுவைக்காக நமக்கு இதைச் சொல்கிறார்கள் என்று நாம் நினைப்பதும் ரொம்பத் தப்பு. காரணம், அவர்கள் எடுத்து வைக்கும் ஆழமான, ஆணித்தரமான ஆதாரங்களும், அவற்றை ஒட்டிய விவாதங்களும்தான். அதிகம் ஏன், இந்தப் பயிர்வட்டம் சம்பந்தமாகவே அசைக்க முடியாத ஆணித்தரமான ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. அதை மறுத்துப் பேச எந்த அரசும் முன்வரவில்லை. வரவும் முடியாது என்றுதான் சொல்கிறார்கள். காரணம், அந்த ஆதாரம் அவ்வளவு திடமான ஆதாரமாக இருந்தது. அது என்ன ஆதாரம் என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்.......!
Posted Image
இதுவரை பயிர்வட்டங்கள் இங்கிலாந்தில்தான் அதிகளவு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தோம். அங்கு தோன்றுவதாலேயே சிலர் அதை நம்பவும் மறுக்க ஆரம்பித்தனர். காரணம், அங்கிருக்கும் யாரோதான் இவற்றுக்குக் காரணம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். என்னதான் மனிதன் செய்யமுடியாது என்று ஆதாரங்களை முன்வைத்தாலும், அவநம்பிக்கை நீடித்துக் கொண்டேதான் வந்தது. ஆனால், ஆச்சரியமாக, ஜேர்மனியில் ஒரு பயிர்வட்டம் உருவாகியது. இந்தப் பயிர்வட்டம் ஜெர்மனியில் தோன்றியது மட்டும் ஆச்சரியமில்லை. அதன் தாக்கம் தந்த ஆச்சரியம், பயிர்வட்ட மர்மங்களுக்கே உச்சமாக அமைந்தது. இது பற்றி விளக்கமாகவே நான் உங்களுக்கு சொல்ல வேண்டும்.
ஜெர்மனியில் கிராஸ்டோர்ஃப் (Grasdorf) என்னுமிடத்தில், வேர்னர் ஹாரென்பேர்க் (Werner Harenberg) என்னும் விவசாயிக்குச் சொந்தமான விளைநிலத்தில் கோதுமைப் பயிர் விளைவிக்கப்பட்டிருந்தது. 23ம் திகதி ஜூன் மாதம் 1991இல் மிகப்பெரிய பயிர்வட்டமாக அது உருவாக்கப்பட்டிருந்தது. 6000 சதுரமீட்டர் பரப்பளவில் அந்தப் பயிர்வட்டம் உருவாகியிருந்தது. மனிதனால் செய்யப்படாமல் இருக்கும் பயிர்வட்டங்களின் அனைத்துத் தன்மைகளும் அந்தப் பயிர்வட்டத்துக்கும் இருந்தது. மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த அந்தப் பயிர்வட்டத்தின் சித்திரம், சூரியக் குடும்பத்தைக் குறிப்பதாக அமைந்திருந்தது. 'வழமையான பயிர்வட்டங்கள் போலத்தானே இருக்கின்றன, இதில் எங்கே ஏலியன் வந்தது?' என்றுதானே நினைக்கிறீர்கள்.

Posted Image
இந்தப் பயிர்வட்டத்தை ஆராய்ந்தபோது, அதில் கதிர்வீச்சு போன்ற ஒன்று இருக்கலாம் என்ற உணர்வு தோன்றியதால், உலோகங்கள் கண்டுபிடிக்கும் கருவி கொண்டு (Metal detector) அதை ஆராய்ந்தார்கள். அந்தப் பயிர்வட்டச் சித்திரத்தின் மூன்று இடங்களில் கருவி அலறியது. குறிப்பாக அந்தப் பயிர்வட்டத்தில் எங்கே அரைவட்டங்கள் காணப்பட்டனவோ, அந்த மூன்று அரைவட்டங்களின் மத்தியில் உலோகம் இருப்பதாகக் காட்டியது கருவி. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, அரை மீட்டர் நிலத்தின் கீழே மூன்று உலோகத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு அடிக்கும் அதிகமான விட்டமுடைய வட்டவடிவ உலோகத் தகடுகளாக அவை காணப்பட்டன. அதில் ஒன்று தங்கத்தினாலும், இன்னுமொன்று வெள்ளியினாலும், மூன்றாவது பித்தளை போன்ற ஒரு கலப்பு உலோகத்தினாலும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தத் தகடுகளில் உருவாக்கப்பட்டிருந்த பயிர்வட்டம் அச்சுப் போல அமைக்கப்பட்டிருந்ததுதான்.
பித்தளை போன்ற கலப்புலோகத்தால் செய்யப்பட்டிருந்த தகடு மூன்று கிலோக்கள் எடையும், வெள்ளியால் செய்யப்பட்டிருந்த தகடு ஐந்து கிலோக்களும், தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த தகடு ஏழரைக் கிலோக்களும் இருந்தன. ஜெர்மனியில் உள்ள உலோக ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன், எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்பினால் ஆராய்ந்தபோது, தங்கமும், வெள்ளியும் தரத்தில் மிகவும் கூடியதாகவும், தூய்மையானதாகவும் காணப்பட்டன. அவ்வளவு தூய்மையான தங்கமோ, வெள்ளியோ பூமியில் இதுவரை யாரும் பயன்படுத்தியது இல்லை. பலர் இவற்றை அந்த விவசாயிடமிருந்து வாங்குவதற்கு முயன்றதனால், அதிக விலைக்கு அவற்றை அவர் விற்கக் கூடியதாக அமைந்தது. இந்த உலோகத் தகடுகளை ஆராய்ந்தவர்கள் குறைந்தபட்சம் இவை 300 ஆண்டுகளிலிருந்து 1500 ஆண்டுகளுக்கு முன்னரே நிலத்தில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
இங்கு இருக்கும் முக்கிய செய்தி என்ன தெரியுமா? மனிதன் இந்தப் பயிர்வட்டத்தை உருவாக்கியிருந்தால், தனது லட்சக்கணக்கான பணத்தை வீணாக்கி இப்படி ஒன்றை உருவாக்குவானா? ஏழரைக் கிலோ தங்கத்தை யாருக்காகவும் தாரைவார்த்துக் கொடுப்பானா? இவ்வளவு தூய்மையான தங்கமோ, வெள்ளியோ அவனுக்கு எப்படிக் கிடைத்தது என்பதே பெரும் கேள்வியாக அமைந்துவிடும் அல்லவா? அல்லது ஆராய்ச்சியாளர்கள் சொன்னது போல, பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இவை புதைக்கப்பட்டிருந்தால், அந்த உலோகங்களில் இந்தப் பயிர்வட்டச் சித்திரம் எப்படி வந்தது? இப்படிப் பதில் தெரியாக் கேள்விகளையே, மிகவும் அசைக்க முடியாத ஆதாரங்களாக, ஏலியன்கள்தான் பயிர்வட்டங்களை உருவாக்குகின்றன என்று சொல்வதற்குச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் நமது பிரச்சினை தற்போது பயிர்வட்டங்கள் அல்ல. ஏலியன்கள் பூமியில் இருக்கின்றனவா என்பதுதான்.
இந்தப் பயிர்வட்டங்களைத் தாண்டி, விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று சேர்ந்த நிலையில், ஏலியன்கள் பூமியில் வாழ்கின்றன என்பதற்குச் சான்றாக ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அது ஒரு மிகச் சிறிய உயிரினம். 'நீர்க்கரடி' (Water Bear) என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படும் அந்த உயிரினத்தின் உயிரியல் பெயர் Tardigrade. பெயர்தான் கரடியேயொழிய, 1.5 மி.மீ. நீளம்தான் இருக்கும். உப்புநீர், நன்னீர், சேற்றுநிலம், பனி என அனைத்து இடங்களிலும் வாழக் கூடியது. உலகின் எல்லாக் கண்டங்களிலும், துருவம் உட்பட இவை காணப்படுகின்றன. எட்டுக் கால்களும், அந்தக் கால்களில் 4 லிருந்து 8 விரல்களையும் கொண்டவை இவை. இமயமலையில் 6000 மீட்டரில் கூட வாழும் இந்த உயிரினம், விஞ்ஞானிகளைக் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது. இவற்றைத் தொடர்ந்து ஆராய்ந்ததில் வியப்பான முடிவுகள் பல வெளிவந்தன. அதாவது, -272 சதமபாகைக் குளிரிலும் இவை உயிர்வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ஆறு மாதங்கள் தொடர்ந்து எதையும் உள்ளெடுக்காமல் உயிர்வாழ்ந்தன. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் கூர்ப்பின் (Evolution) கொள்கைப்படி பூமியின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப வாழும்படியே தம்மை அமைத்துக் கொள்கின்றன. பூமியில் எந்த எந்த இடங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவோ, வாழ்ந்தனவோ அதையொட்டி தம்மை அவை வடிவமைத்துக் கொள்கின்றன. இதுவரை எந்த உயிரினமும் இதுதாண்டி உயிர்வாழ்வதாக விஞ்ஞானிகள் அறியவில்லை. ஆனால் ஒரு உயிரினம் பூச்சியத்துக்குக் கீழே -272 பாகைகள் குளிரில் பூமியில் வாழவேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதற்கு அவசியமே இல்லை. அப்படி ஒரு இடமும் பூமியில் இல்லவேயில்லை. பூமியில் அப்படி ஒரு இடம் இல்லாத பட்சத்தில், இந்த நீர்க்கரடி மட்டும் தன்னை அந்த அளவுக்குக் குளிரில் வாழும்படி ஏன் வடிவமைத்துக் கொண்டது? இந்தக் கேள்வி இதை வாசிக்கும் சிலருக்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இது ஒரு மாபெரும் அதிசயம். இந்த அதிசயம் மேலும் அவர்களின் சிந்தனையைத் தூண்ட, ஜெர்மனியின் விஞ்ஞானிகள், ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து ஒரு பரிசோதனையைச் செய்து பார்க்க முயன்றனர்.  
பூமிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட நீர்க்கரடிகளைப் பரிசோதித்த விஞ்ஞானிகள் ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும் துள்ளிக் குதித்தனர். 'கிரிப்டோபையோசிஸ்' (Cryptobiosys) என்னும் ஒருவித, 'இறந்தது போல தன்னைத்தானே ஆக்கிக் கொள்ளும்' முறையால் உறைந்திருந்த நீர்க்கரடிகள் மீண்டும் உயிர்த்தெழுந்து நடக்கத் தொடங்கின. தங்களுக்கு எதுவுமே நடக்கவில்லை என்பது போன்ற பாவனையுடன் அவை நடமாடின. விண்வெளியில் உள்ள கதிர்வீச்சுக்கு பூமியில் வாழும் எந்த உயிரினமும் தப்பவே முடியாது. கதிர்வீச்சு என்பது அவ்வளவு மோசமான விளைவுகளை உயிரினங்களுக்கு ஏற்படுத்தவல்லது. அத்துடன் காற்றில்லா வெளியில் வாழ்வதும் எந்த உயிரினத்துக்கும் சாத்தியமில்லாதது. சரி, அப்படிக் கதிர்வீச்சில் தப்பினாலும், நீர்க்கரடிகள் அடுத்ததாகச் செய்த காரியம்தான் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதாவது, உறக்கத்திலிருந்து எழுந்த நீர்க்கரடிகள், தங்களை இனப்பெருக்கத்துக்குத் தயார்ப்படுத்த ஆரம்பித்தன. விண்வெளிக்குச் சென்ற ஆண், பெண் நீர்க்கரடிகள் இரண்டும் ஒன்று சேர்ந்தது மட்டுமில்லாமல், குட்டிகளையும் பெற்றுக் கொண்டன. இது சாத்தியமே இல்லாத ஒன்று. பூமியில் வாழும், வாழ்ந்த எந்த உயிரினத்துக்கும் இந்தச் சாத்தியம் இல்லவே இல்லை. இந்தக் காரணத்தினால்தான் அந்தச் சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு வந்தது. 'அட! இவை வேற்றுக் கிரகங்களிலிருந்து வந்திருக்கலாமோ?' என்னும் சந்தேகம் வலுவாக அவர்களுக்கு முளைத்தது.
நீர்க்கரடிகள் வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கலாம் என்பதற்கு வேறு காரணமும் இருக்கலாமா? இவை போல, வேறு பல உயிரினங்களும் வேற்றுக் கிரகங்களிலிருந்து வந்திருக்கலாமா? என்னும் கேள்விகள் இப்போது தலையைக் குடைய ஆரம்பிக்கின்றன
பூமியில் வேற்றுக்கிரக உயிரினங்கள் இருக்கின்றனவா?' என்னும் கேள்விக்குப் பதிலளிக்கும் வண்ணமாக, நீர்க்கரடி (Tardigrade) பற்றிச் சொல்லியிருந்தேன். இந்த நீர்க்கரடி பற்றி மேலும் சில விசயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும் இந்த வாரம் மிக முக்கியமான வேறு ஒன்றைப் பற்றிச் சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதைச் சூழ்நிலை என்று சொல்வதைவிட, உலகையே உலுக்கிவிடப் போகும் நிகழ்வு என்றே சொல்லலாம். இந்தச் செய்தி மட்டும் உண்மையாக இருந்தால், அவிழ்க்க முடியாமல் இருக்கும் பல மர்மங்கள் சுலபமாக அவிழ்ந்து போகக் கூடியவாறு அமைந்துவிடும். அல்லது வழமை போல இதுவும் எதுவுமே இல்லாமல் அமிழ்ந்து போகும் ஒன்றாகலாம். தொடர்ந்து இதுபற்றி மேலே எழுதுவதற்கு முன்னர், மீண்டும் ஒருமுறை நான் ஒரு தன்னிலை விளக்கத்தை உங்களுக்குத் தரவிரும்புகிறேன். என்னிடம் பலர் கேட்கும் கேள்விகள், "ஏலியன்கள் பூமிக்கு வந்து போயிருக்கின்றனவா? நீங்கள் ஏலியன்கள் இருப்பதை நம்புகிறீர்களா?" என்பவைதான். இதற்கான எனது பதிலை, நான் இப்பொழுதே தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.
பிரபஞ்சத்தில் உள்ள வேற்றுக் கிரகங்களில் நம்மை விட அறிவுள்ள ஜீவராசிகள் வாழ்வதற்கான சாத்தியம் உண்டு என்பதை நான் சந்தேகமின்றி நம்புகின்றேன். ஆனால், அவை பூமிக்கு வந்தனவா என்பதை நான் இன்னும் நம்பவில்லை. ஆனாலும் ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை என்னால் மறுக்க முடியவில்லை. ஏலியன் விசயத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால், 'ஏலியன்கள் பூமிக்கு வந்தார்கள்' என்று சொல்பவர்கள், 'இல்லை அப்படி யாரும் வரவில்லை' என்று சொல்பவர்கள் இருவருமே அறிவியல் அறிஞர்கள்தான். இதற்குள் மதங்களோ அல்லது மாற்று சக்திகளோ வந்து கலக்கவில்லை. இரண்டு விதமான கருத்துகளையும் இவர்கள்தான் சொல்கிறார்கள். ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்லும் அறிஞர்கள், உலகில் நடந்த மர்மங்களையும், அதிசயச் சம்பவங்களையும் தமக்குச் சாட்சியங்களாக முன் வைக்கிறார்கள். ஆனால் இல்லை என்று சொல்பவர்கள் எப்போதும், இருக்கிறது என்று சொல்பவர்களின் சாத்தியங்களை முறியடிக்கும் வாதங்களை மட்டுமே முன்வைக்கிறார்கள். நடந்த சம்பவங்களுக்குரிய வலிமையான காரணங்களைச் சொல்வதுமில்லை. அவை பற்றி மேலும் ஆராய்வதுமில்லை. ஏலியன்கள் இல்லை என்று எதிர்ப்பவர்கள் எப்போதும் அரசுகள் சார்ந்த அமைப்புகளில் உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு உதாரணமாக நாஸாவைச் சொல்லலாம். ஆனால் இதே நாஸாதான் கோடிக்கணக்கான டாலரைக் கொட்டி ஏலியன்களைத் தேடவும் செய்கிறது. ஏலியன்கள் இருக்கின்றன என்று மக்களுக்குத் தெரிந்தால், அது மிகப்பெரிய குழப்பத்தை விளைவிக்கும் என்பதாலும், அமெரிக்கா போன்ற அதியுயர் சக்திவாய்ந்த அரசுகளை விடவும் சக்தியுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று மக்கள் அறிந்தால், அரசுகளின் மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பதாலுமே, இவர்கள் இந்த ஏலியன் சமாச்சாரத்தை வன்மையாக எதிர்க்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
அறிவியல் அறிஞர்களான இவர்கள் இருவருமே இரண்டாகப் பிரிந்து, நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு இரண்டு வகையான செய்திகளைச் சொல்லும்போது, நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாமல், அவற்றை மிஸ்டரிகளாகவும், அதிசயங்களாகவும் பார்க்கிறோம். இதனாலேயே நாம் எப்போதும் குழப்பத்தில் இவர்கள் இருவரினாலும் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவர்கள் இருவரது நோக்கமும் கூட அதுவாகத்தான் இருக்குமோ தெரியவில்லை. அதனால்தான் பல உண்மைகள் நமக்குத் தெரியாமல் மறைக்கப்படுவதாகவும் இருக்கலாம். சொல்லப் போனால் இந்தத் தொடரின் கேள்வியே, "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்பதுதானே! அதனால், நான் ஏலியன்கள் பற்றித் தெரிந்துகொண்ட அனைத்து சம்பவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். நானும், நீங்களும் சேர்ந்து இது பற்றிய உண்மைக்கு அருகில் சென்று பார்த்து வரலாம். நிச்சயம் உண்மையென்பது இந்த இரண்டில் ஒன்றுதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே இரண்டுவிதமான சாத்தியங்களையும் நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த அளவுக்கு விளக்கத்தை இப்போது நான் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கும் காரணம் ஒன்று உண்டு. இனி நான் சொல்லப் போகும் பல சம்பவங்கள் அமெரிக்க 'ஹாலிவுட்' திரைப்படங்களின் கதைகள் போல இருக்கும். நம்பவே முடியாததாக இருக்கும். படிக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகவும் உங்களுக்கு இருக்கும். ஆனால் அவையெல்லாம் ஆதாரங்களுடன் இருந்தாலும், அவற்றில் ஒரு நம்பகத்தண்மை இருந்தாலும் மட்டுமே, அவற்றை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வேன். நான் கொடுக்கும் தகவல்கள் அனைத்தையும் நீங்கள் இணையத்தளங்களிலோ, நூல்களிலோ தேடும்போது, அவற்றின் பதிவுகள் உங்களுக்குக் கிடைக்கும் வகையிலேயே இருக்கும். சரி, இனி விசயத்துக்கு வரலாம்.

Posted Image

Posted Image



2012 ஆகஸ்ட் 6ம் திகதி, செவ்வாயில் நாஸா அனுப்பிய விண்கலமான 'க்யூரியாசிட்டி' (Curiosity) தரையிறங்கியது. மனித வரலாற்றில் மிகமுக்கியமான ஒரு சம்பவமாக அது தன்னை அமைத்துக் கொண்டது. அந்தக் க்யூரியாசிட்டி தற்போது செவ்வாய்க் கிரகத்தின் படங்களை எடுத்துப் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. அது அனுப்பிய படம் ஒன்றுதான் இப்போது ஒரு பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. நான் மேலே கொடுத்திருக்கும் இரண்டு படங்களையும் உற்றுப் பாருங்கள். செவ்வாயின் நிலப்பகுதியும், செவ்வாயின் வான்வெளியும் அந்தப் படத்தில் தெரிகிறது. முதலில் உள்ள படத்தை க்யூரியாசிட்டி அனுப்பியபோது, நாஸா அதில் பெரிதாக ஒன்றையும் கவனிக்கவில்லை. ஆனால் அதைப் பார்த்த வேறு சிலர், அதில் ஏதோ வித்தியாசமாகத் தெரிவதாகச் சந்தேகப்பட்டனர். கணனி மூலம், அந்தப் படத்தை ஒளி, வர்ண மாற்றங்கள் செய்து பார்த்தபோது, சில புள்ளிகள் போன்ற வடிவங்கள் செவ்வாயின் வானில் காணப்பட்டதை அவதானித்தனர். அவற்றைப் பெரிதாக்கிப் பார்த்தபோது, ஒளியுடன் அவை மின்னிக் கொண்டிருந்தன. மனிதன் அனுப்பிய க்யூரியாசிட்டியை வானில் இருந்து யாரோ அவதானித்துக் கொண்டிருப்பது போல அவை காணப்பட்டன. அந்தப் புள்ளிகள் அயல் கிரகவாசிகளின் பறக்கும்தட்டு என்று அவர்கள் நிச்சயமாகச் சொல்கின்றனர். அவர்கள் சொல்வதில் ஒருவித நியாயம் இருப்பதை நாமும் மறுக்க முடியாததாகவே இருக்கிறது.

Posted Image

Posted Image

"இவர்களுக்கு வேற வேலையே இல்லையா? எதையெடுத்தாலும் அதில் ஒரு மிஸ்டரியைப் புகுத்துவதே இவர்கள் வேலையாகப் போய்விட்டது" என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் சந்தேகப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதற்குக் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தக் காரணங்கள் எவையென்று நாம் பார்ப்பதற்கு முன்னர், இந்தப் படத்திலிருப்பவை பறக்கும் தட்டுகள்தானா என்று கேட்பதற்கு, இவற்றை மறுப்பவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்த்தால், வழமை போல 'க்யூரியாசிட்டி எடுத்து அனுப்பிய படங்களில் பிக்ஸல் (Pixel) தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன' என்று சொல்லிச் சமாளிக்கிறார்கள். அந்தப் படத்தில் தெரியும் புள்ளிகள் ஒன்று போல மற்ற ஒன்று காணப்படவில்லை. வடிவத்திலேயோ, பருமனிலேயோ அவை வேறாகத்தான் இருக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகின்றது. அதுமட்டுமில்லாமல், க்யூரியாசிட்டியில் அமைக்கப்பட்ட காமெரா மிகவும் துல்லியம் வாய்ந்த உயர் தொழில்நுட்பம் கொண்டது. 'MARDI' (Mars Descent Imager) என்று சொல்லப்படும், இதற்கென்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட காமெரா அது. அதில் பிக்ஸல் தப்புகள் நடந்தன என்று சொல்வதுதான் பலரால் நம்ப முடியாமல் இருக்கின்றது. இப்படியான தவறுகள் காமெராக்களில் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், எப்போதும் இது போன்ற சம்பவங்களில் இதையே காரணம் காட்டி நழுவியும் விடுகிறார்கள். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் நாஸா இதுபற்றி இதுவரை வாயே திறக்கவில்லை.



Posted Image



செவ்வாயில் பறக்கும் தட்டுகள் இருக்கின்றன என்று சந்தேகப்படுவதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்று சொன்னேன் அல்லவா? அவை கொஞ்சம் சுவாரஸ்யமானவைதான். 1996ம் ஆண்டு அண்டார்டிகாவில் ஆராய்ச்சியாளர்களால் ஒரு எரிகல் (Meteor) கண்டெடுக்கப்பட்டது. விண்வெளியில் சுற்றிவரும் சிறிய விண்கல் (Meteoroid) பூமியின் வளிமண்டலத்தில் நுழைவதால் அது எரிந்து மிஞ்சும் பகுதிகள், எரிகற்களாக பூமியில் சிதறி விழும். 'Meteoroid' என்று அழைக்கப்படும் பெரிய கல்லொன்று, பூமியில் நுழைந்து எரிந்து, சிதறி விழுந்த பின் அது 'Meteor' என்று அழைக்கப்படும். 1996ம் ஆண்டு அண்டார்ட்டிகாவில் கண்டெடுக்கப்பட்ட எரிகல்லை ஆராய்ந்தபோது, அதில் ஒரு ஆச்சரியமான செய்தி ஒன்று காத்திருந்தது. 13,000 வருசங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வெடித்து வந்த அந்தக் கல்லில் பாக்டீரியா போன்ற ஒரு உயிரினம், படிமமாகப் (Fossil) பதிந்திருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லுடன் கல்லாக, படிமமாக மாறிவிட்ட அந்த பாக்டீரியா போன்ற உயிரினம், சிக்கலான சேதனத்தைக் கொண்டிருந்தது. இதற்கு ALH84001 என்று பெயரிட்டிருக்கிறார்கள். அந்த உயிரினத்துக்கு கலம் (Cell) இருந்ததோடு, அது இரண்டு கலங்களாகப் பிரிந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் பூமியின் உயிரினங்களுக்கு மிகவும் அண்மையில் உள்ளவாறு இருந்தன. இந்த ALH84001 என்ற ஒன்றே, உயிரினம் பூமி தாண்டி, அயல் கிரகங்களிலும் இருக்கின்றன என்பதற்கு சான்றாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக செவ்வாயில் உயிரினம் இருக்கின்றது என்பதை இந்தச் சம்பவம் நம்பவும் வைக்கிறது.



Posted Image

Posted Image



"இது பாக்டீரியா போன்ற சிறிய நுண்ணுயிர். இதை வைத்துக் கொண்டு எப்படிச் செவ்வாயில் பறக்கும் தட்டும், புத்திசாலியான ஏலியன்களும் இருக்கின்றன என்று நீங்கள் சொல்லலாம்?" என்னும் கேள்வி இப்போது உங்களுக்கு நிச்சயம் தோன்றியிருக்கும். அதற்கும் கைவசம் பதில்கள் இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது 25.08.2012 சனிக்கிழமை இரவு, உலக சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனை மனிதர் மரணமடைந்தார். அவரை அறியாதவர்கள் எவருமில்லை என்னும் அளவுக்குப் பிரசித்தி பெற்றவர். அவர் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong). நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் என்று பெயர் பெற்றவர். மொத்தமாக பன்னிரண்டு பேர் நிலவில் கால் பதித்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இல்லாத பெயர் இவருக்கு உண்டு. 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் திகதி, 'அப்போலோ 11' (Apollo 11) என்னும் விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong), எட்வின் ஆல்ட்ரின் (Edwin Buzz Aldrin), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) ஆகிய மூவரும் நிலவுக்கு முதல் மனிதர்களாகப் பயணம் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். சந்திரனில் மனிதன் கால் பதித்தது என்று சொல்வது, ஒரு மாபெரும் ஏமாற்று வேலை என்ற பலமான எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தாலும், கால் பதித்ததை அனைவரும் நம்பத்தான் செய்கிறார்கள். ஆனால் நான் இப்போது சொல்ல வந்தது, ஆம்ஸ்ட்ராங் நிலாவில் முதலில் கால் பதித்தது பற்றியோ, அப்போலோ 11 பற்றியோ, நிலாவில் மனிதன் கால் வைக்கவில்லை என்பது பற்றியோ இல்லை. நான் சொல்ல வந்த விசயமே வேறு.




Posted Image




ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் நிலவில் நடந்தபோது, தங்களுக்கு மேலே சில ஒளி வட்டங்களைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமமல்லாமல் அவற்றைப் படங்களும் எடுத்திருக்கிறார்கள். நிலவில் இருந்துகொண்டு பூமியுடன் அவர்கள் பேசியபோது, தங்களை யாரோ அவதானிக்கிறார்கள் என்று சொல்லியும் இருக்கிறார்கள். ஏலியன்களின் விண்கலங்களையும், அவர்கள் நிலவில் அமைத்திருந்த அமைப்புகளையும் கூட, ஆம்ஸ்ட்ராங் படங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்கள். இவையெல்லாம் ஒரு வதந்தி என்னும் நிலையில் உலகம் நம்பாமல் இருந்தபோது, துணிச்சலாக ஆல்ட்ரின் இதைத் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிககைகளுக்கும் வெளிப்படையாகச் சொன்னார். ஆல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் பலரை அதிர வைத்தது. இது பற்றிய விபரங்கள் காணொளிகளாகவும், செய்திகளாகவும் இணையம் எங்கும் பரவியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். உலகின் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் நாஸாவில் அதற்கு அப்புறம் ஒரு சம்பவம் நடந்தது. அப்போலோ 11 இல் சென்றவர்கள், நாஸாவுடன் உரையாடிய ஒலி, ஒளிநாடா திடீரெனக காணாமல் போனது. குறிப்பிட்ட நிமிடங்கள் உள்ள அனைத்துப் பதிவுகளும் அவற்றிலிருந்து அழிக்கப்பட்டன. இவை ஏன் நடந்தது என்பது இதுவரை தெரியாத மர்மமாகவே இருக்கிறது. ஆல்ட்ரின், ஆம்ஸ்ட்ராங் இருவரும் நிலவுக்குச் சென்ற சாதாரண மனிதர்களல்ல. இருவருமே அறிவியலில் மிகையறிவு படைத்தவர்கள். ஆஸ்ட்ராநாட்ஸ் என்னும் பதவி யாருக்கும் சுலபமாகக் கிடைத்துவிடும் பதவியல்ல. கல்வியிலும், தகுதியிலும் சிறந்தவர்கள் மட்டும்தான் அதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட இருவருமே ஏலியன்கள் உண்டு என்று சொல்லும் போது, மற்றவர்கள் எம்மாத்திரம்?



Posted Image




ஆச்சரியம் இத்துடன் முடிந்து போய்விடவில்லை. நிலவில் கால் பதித்த ஆறாவது நபரும், அப்போலோ 14 விண்கலத்தின் மூலம் சந்திரனுக்குச் சென்றவருமான 'எட்கார் மிட்ஜெல்' (Dr.Edgar Mitchell) என்பவர் ஏலியன் இருப்பதாகச் சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறார். தங்களுக்கு நடந்த சம்பவங்களையும், நாஸாவில் தான் பணிபுரிந்தபோது அறிந்து கொண்டவைகளையும் வைத்து, பூமிக்கு ஏலியன்கள் பல தடவை வந்து போனது நாஸாவுக்குத் தெரியும் என்றும், அதை 60 வருட காலங்களாக நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்றும் பேட்டியில் அவர் சொல்லியுள்ளார். இவர் கூறியுள்ள தகவல்கள் ஏலியன் விசயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஏலியன்கள் மனிதர்களின் உருவத்தைப் போலவே இருந்தாலும், சிறிய உருவமாக இருந்ததாகவும், அவற்றின் கண்கள் பெரிதாக இருந்ததாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.



Posted Image




இப்படிப் பல நிகழ்வுகள் நடந்த நிலையில்தான், செவ்வாய்க் கிரகத்தின் வான்வெளியில் ஒளிப்பந்துகள் காணப்படுகின்றன. அவற்றைப் பறக்கும் தட்டு என்றும், மனிதர்களின் செயல்பாட்டை ஏலியன்கள் கண்காணிக்கின்றன என்றும் சொல்கின்றனர். எது உண்மை, எது பொய் என்று தெரியாத நிலையில் நாம் தவிக்க விடப்படுகிறோம். நாஸாவில் பணிபுரிந்தவர்களில் பலர், நாஸா உண்மைகளை மறைக்கின்றது என்று அடிக்கடி சொல்வதை வதந்திகள் என்று நம்மால் ஒதுக்கிவிடவும் முடியவில்லை. அதனால் ஏலியன்கள் பூமியில் இருப்பதற்கான சாத்தியங்களைத் தொடர்ந்து நாம் பார்த்தால்தான் நமக்கென ஒரு விளக்கம் கிடைக்கும்
 
நன்றி -அபராஜிதன்         

Comments

Popular posts from this blog

[RG] Horror movies

107.John Wayne GACY Jr.

30. SERIAL KILLERS AND ASTROLOGY